சமூக வலைதள மோசடி அதிர்ச்சி: 2025-ல் ரூ.1.89 லட்சம் கோடி ஏமாற்றம்
2025 ஆம் ஆண்டில் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.1.89 லட்சம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது. முதலீடு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் போலி காதல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
உலகளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதே அளவில் இணைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.1.89 லட்சம் கோடி அளவிற்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தரவுகள் கூட்டாட்சி வணிக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மோசடி இந்த காலகட்டத்தில் நடந்துள்ளது.
இணைய வழி மோசடிகள் தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளதாகவும், இவை பெரும்பாலும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் நடைபெறுகின்றன. சமூக வலைதளங்கள் மோசடி செய்பவர்களின் முக்கிய தளமாக மாறிவிட்டன.
கணக்கெடுப்புகளின்படி, சுமார் 30 சதவீத மக்கள் இணைய வழியில் பண இழப்பை சந்தித்துள்ளனர். இதில் முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.
மோசடிகள் பெரும்பாலும் நேரடியாக தெரியாமல், விளம்பரங்கள், சந்தேகமான இணைப்புகள் மற்றும் போலியான கணக்குகள் மூலம் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் நம்பகமான கணக்குகளை போலியாக உருவாக்கியும் மோசடி நடைபெறுகிறது.
மக்கள் அதிகமாக சிக்கிக் கொள்ளும் மோசடிகளில், ஆன்லைன் ஷாப்பிங் மோசடி முக்கியமானது. குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று விளம்பரம் செய்து, ஆர்டர் செய்த பிறகு தரமற்ற அல்லது வேறு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
அடுத்து முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எளிதில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதன் மூலம் 1.1 பில்லியன் டாலர் வரை மோசடி நடைபெற்றுள்ளது.
மேலும், போலியான காதல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் நட்பாக பழகி, பின்னர் உணர்ச்சி ரீதியாக நெருக்கம் உருவாக்கி பணம் கேட்பது போன்ற முறைகளில் மோசடி நடைபெறுகிறது.
இதனால், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான தகவல்கள் மற்றும் இணைப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Prasanth Subramani