தவெகவை ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவை ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவை ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை ஆட்சியமைக்க ஏன் இன்னும் அழைக்கவில்லை என்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது.

விஜய் தலைமையிலான தவெக, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க உரிமை கோரி, தமிழ்நாடு ஆளுநர் ரஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் அவர்களை கடந்த புதன்கிழமை சந்தித்தது. அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று இரவு வரை தவெகவை ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்து, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது ஏன் அவசியம் என்பதை ஆளுநர் விஜய்யிடம் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தவெக தனிப்பெரும் கட்சியாக மட்டுமே ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்றும், கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே 118 உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் பட்டியல் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஏஆர்எல் சுந்தரேசன் அவர்களிடம் ஆளுநர் மாளிகை சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏஆர்எல் சுந்தரேசன் வழங்கிய சட்ட ஆலோசனையின் அடிப்படையில், தவெக 108 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தனிப்பெரும் கட்சியாக அல்லாமல், காங்கிரஸ் ஆதரவுடன் 113 உறுப்பினர்கள் ஆதரவு உள்ள கூட்டணியாக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளதாகவும், எனவே முழு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தவெகவை மேலும் எந்தக் கட்சிகள் ஆதரிக்க உள்ளன என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. அந்த சட்ட ஆலோசனையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைப்பது சாத்தியமில்லை என்பதை ஆளுநர் விஜய்யிடம் தெளிவுபடுத்தியதாகவும், சட்ட ரீதியான விளக்கங்களை வழங்குவதற்காகவே இன்று மீண்டும் விஜய்யை ஆளுநர் அழைத்து சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.