“சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்க அமெரிக்கா தகுதியற்றது” – ஈரான் கடும் பதில்
அமெரிக்கா சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை, போர் மற்றும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் கடுமையாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து, முக்கியமான கடல் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் விளைவாக பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. இதனால், இந்த நீரிணை மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
தற்போது போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், போரை முழுமையாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் முன்வைத்துள்ளது. இதை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஈரானின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ரெசா தலாயி-நிக், “சுதந்திர நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா இனி நிபந்தனை விதிக்க முடியாது. அமெரிக்கா தனது சட்டவிரோத மற்றும் பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் தனது தற்காப்பு இராணுவ திறன்களை சுதந்திர நாடுகளுடன், குறிப்பாக உறுப்புநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார்.
அதே நேரத்தில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்கினால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், போரை நிறுத்தவும் ஈரான் முன்வந்துள்ளது. ஆனால், இந்த முன்மொழிவை அமெரிக்கா ஏற்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்பட்டாலும், அவர்கள் அணு ஆயுதம் நோக்கி நகர்வதைத் தடுப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்புக் குழு இந்த முன்மொழிவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், இதுகுறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Prasanth Subramani